Tuesday 15 October 2013

அந்தக் காட்சி

விடிந்தும் விடியாத 
காலைப் பொழுது அது
விரல்கள் மண்ணின் உடலில்
விளையாடிக்கொண்டிருந்த
அந்த அதிகாலை நேரத்தில்
கோலத்தின் நடுவினிலே 
பாதி மலர்ந்தும் மலராத
மலர் அது

கடலின் மடியில் பிறப்பெடுத்து 
காலையின் சோம்பலினை
முறித்தும் முறிக்காமலும்
உலகமவள் கன்னியைக் காண வரும்
பகலவனைப் போல 
உன் முகம் நான் காண ....

அதோ... அதோ...

தூரத்திலுள்ள 
அந்தக் குட்டிச் சுவரின் மறைவில் 
நான் மறைந்து நிற்கையிலும்
பாதி முகம் காட்டிய
பாவாடை தாவணியில்
பருவம் விளைந்த 
உன் முகம்
தெரிந்தும் தெரியாமலும் 
ஓடி வந்து
உட்கார்ந்து கொண்டது 

என் கண்களுக்குள்...

No comments:

Post a Comment